(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு, கொவிட் தடுப்பு குழுவின் அனுமதிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய பாடசாலைக்குள் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் முதலான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமானதாகும்.
கொவிட் பரவல் காரணமாக சுமார் 2 வருட காலமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இடைக்கிடையே மூடப்பட்ட நிலையில், கொவிட் பரவல் நிலையானது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஆரம்பப் பிரிவுகள் கடந்த மாதம் 25 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.