அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள எமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போராட்டத்தை தொடங்கினர்.
இதையடுத்து போராளிகளை ஒடுக்க உதவுமாறு, அதிபர் மன்சூர் சவுதி அரேபியாவிடம் உதவி கேட்டார். இதைத் தொடர்ந்து சவுதி அரேபிய படைகள் போராளிகள் கைவசம் உள்ள பகுதிகளில் மீது வான் வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், எமன் நாட்டு மையப்பகுதியான டாயேஸ் நகரில் உள்ள அதிபரின் மாளிகையை கைப்பற்ற அதிபரின் ஆதரவு போராளிகளுக்கும், ஹவுத்தி படையினருக்கும் இடையில் நேற்று ஆக்ரோஷப் போர் நடந்தது. இருதரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் அதிபரின் ஆதரவாளர்கள் 15 பேரும், ஹவுத்திப் போராளிகள் தரப்பில் 21 பேரும் பலியாகினர்.
எமனில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நடைபெற்றுவரும் இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 4500 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.