நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை மஹிந்தவின் தனிப்பட்ட அவசியத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்டதல்ல – கோத்தா

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட அவசியத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்டதல்ல என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவத்துள்ள அவர்,

விடுதலைப்  புலிகளினால் விமான தாக்குதல் மேற்கொள்ளப்படவிருந்தமையினால் 2009ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய அவசியமான நடவடிக்கைகளாக பாதுகாப்பு பிரிவு மற்றும் இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைய இந்த நிலக்கீழ் மாளிகை நிர்மாணிக்கப்பட்டது.

களனிதிஸ்ஸ ஆலயத்திற்கு விமான தாக்குதல் மேற்கொண்ட விடுதலைப்  புலிகள் கொழும்பு ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ள வந்ததொன்றாகும். போர் சூழ்நிலை காணப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதுகாப்பின் அவசியத்திற்காகவே அவ்வாறான மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.

அந்த கால கட்டத்தில் ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட அவசியத்திற்கமைய நிலக்கீழ் மாளிகை நிர்மாணிக்கப்படவில்லை.

இன்னும்,அவசியமான சந்தர்ப்பங்களில் நாட்டின் அரசாங்க தலைவர்களின் பாதுகாப்பிற்கமைய மாளிகை நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் சிலரினால் சுமத்தப்படுகின்ற குற்றச் சாட்டுகள் அடிப்படையற்றதெனவும் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.