ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, சர்வதேச அளவில் தெளிவான திட்டம் இல்லாதவரை, வான்வெளி தாக்குதல்களை பிரிட்டன் நீடிக்கக் கூடாது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டேவிட் கேமரூனை எச்சரித்துள்ளனர்.
ஈராக்கில் இயங்கிவரும் ஐ.எஸ் படைகள் மீது பிரிட்டன் ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தி வருகிறது. மேலும் அது சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட, கூட்டணிப் படைகளுக்கு உதவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சிரியாவில் இயங்கிவரும் ஐ. எஸ் தீவிரவாதிகளை ஒடுக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் (David Cameron), நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரி வருகிறார்.
இந்நிலையில், சிரியாவில் வான் தாக்குதலை நடத்த நாடாளுமன்ற அனுமதி கோரும் திட்டத்தை கைவிடுமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அழுத்தம் அதிகரிக்கிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய அரசை தோற்கடித்து, சிரியாவில் உள்நாட்டுப் போருக்கு முடிவு காண ”ஒருமித்த சர்வதேச திட்டம்” இல்லாதவரை பிரிட்டனின் இராணுவ நடவடிக்கையை அங்கு விரிவுபடுத்தக் கூடாது என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர்களின் தற்போதைய முடிவு கேமரூனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.