(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ரஷ்யாவின் ஏரோபுளொட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டது.
குறித்த வழக்கில் 2 ஆம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் சிவில் விமான சேவைகள் நிறுவனம் சார்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றினை முன் வைத்து கடந்த ஜூன் 28 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு அழைத்து, சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன வழக்கை தள்ளுபடி செய்யுமாறு முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் வழக்கை இவ்வாறு தள்ளுபடி செய்தது.
கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா இதற்கான உத்தரவை அறிவித்த நிலையில், கட்டணங்களுடன் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இவ்வழக்கு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க முன்னிலையிலேயே ஆரம்பத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த தவணை மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதன்படி நேற்றும் வழக்கானது வணிக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையிலேயே வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக அயர்லாந்தில் உள்ள செலஷ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனம் இந்த வழக்கை செய்திருந்தது.
அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட், ஏரோபுளோட் ரஷியன் ஏர்லைன்ஸுக்கு எதிராக, இரு தரப்பினருக்கு இடையேயான குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியமைக்காக இவ்வாறு முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந் நிலையில் இந்த முறைப்பாட்டு மனு தொடர்பில், ரஷ்ய விமான சேவை நிறுவனம் சார்பில் சட்டத்தரணி கலாநிதி லசந்த ஹெட்டி ஆரச்சி ஆஜராவதுடன் மனுதாரரான அயர்லாந்து நிறுவனம் சார்பில் சட்டத்தரணி அனுர டி சில்வாவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி அவிந்ர ரொட்ரிகோ ஆஜராகின்றார்.
சட்ட மா அதிபர் சார்பில் அரசின் மேலதிக சொலிசிடர் ஜெனரால் சுமதி தர்மவர்தன தலைமையிலான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மஹேன் கொபல்லாவ, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக உள்ளிட்ட குழுவினர் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.