ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் போராட்டக்காரர்களுக்கு தேநீர் உபசாரம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் போராட்டக்காரர்கள்  பலர்  அத்துமீறி நுழைந்து,  அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி  கடமைக்கு இடையூறு விளைவித்ததாக  கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் இன்று ( 25) கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்தனர்.

கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்கவுக்கு இது குறித்து அறிவித்த கறுவாத்தோட்டம் பொலிஸார், இதுவரை சிசிரிவி காணொளிகள் மற்றும்  ஊழியர்கள் பலரிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் ,  இதுவரையிலான விசாரணைகளில்  போராட்டக் காரர்கள் அங்கு அத்துமீறி நுழைந்ததாக தெரியவில்லை என  பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் உள்நுழைந்த போராட்டக்காரர்களுக்கு அங்கு தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என  பொலிஸார் கூறினர்.

எவ்வாறாயினும் இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்த நிலையில், விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.