இலங்கையுடன் இணையும் 24 பிரபல உலக நிறுவனங்கள்! – அமைச்சர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையில் பெற்றோலிய வணிகத்தில் ஈடுபடுவதற்கு விருப்பம் அடங்கிய முன்மொழிவுகளை சில வெளிநாட்டு நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளன.

எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, இந்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, கோரிக்கை விண்ணப்பங்களை முன்வைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செயல்முறை 6 வாரங்களில் இறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதற்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நீண்ட கால ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கான, விருப்பங்களை அண்மையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பகிரங்க அறிவித்தல் ஊடாக கோரியிருந்தது.

அதன்படி, எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.