உக்ரைன் போர் களத்திற்கு மீண்டும் செல்லும் மாணவர்கள்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உயிரை பணயம் வைத்து இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் போர் களத்திற்குள் புகுந்துள்ளனர்.

ரஷ்யா- உக்ரைன் இடையான போர் ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் நாடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவம் படிக்க உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றனர். உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நாடு திரும்பினர்.

போர் தொடங்கி 6 மாதங்களாகிய நிலையிலும், தற்போதும் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் போர் பதற்றம் இருக்கிறது. மேற்கு பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த மேற்கு பகுதியில்தான் அதிகமாக மருத்துவ பல்கலைக்கழங்கள் இயங்கி வருகிறது.

இப்பல்கலைக்கழகங்கள் ஓன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்த நிலையில், தற்போது மாணவர்களை திரும்பவும் பல்கலைக்கழகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, ரஷ்ய போரின்போது அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு செல்ல முன் வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், ஓன்லைன் மூலம் படிப்பது செல்லாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது என மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இதனால், இந்திய மாணவர்கள் பலர் தங்களின் உயிரை பணயம் வைத்து மீண்டும் உக்ரைனுக்கு செல்ல தொடங்கியுள்ளனர் இது குறித்து கேரள மாணவர் பேசுகையில், உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வருகிறேன்.

எனக்கு இன்னும் ஆறு மாத காலம்தான் வகுப்பு உள்ளது. போர் காரணமாக இந்தியா திரும்பினேன். தற்போது மீண்டும் அழைப்பு வந்ததால், மூன்று வாரத்திற்கு முன் சுற்றுலா விசா மூலமாக திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் வாயிலாக துபாய் சென்று, அங்கிருந்து மால்டோவா சென்றேன். பின் அங்கிருந்து பஸ்சில் 300 கி.மீ., பயணித்து பல்கலைக்கழகம் சென்றேன் என கூறியுள்ளார்.