வழக்கை முன்கொண்டு செல்ல முடியாது என சட்ட மா அதிபர் தெரிவிப்பு; முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முழுமையாக விடுதலை..!

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீண்டகால இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளராக செயற்பட்ட சம்சுதீன் மொஹம்மட் யாசீன் மற்றும் கணக்காளர் மனோ ரஞ்சன் ஆகிய மூவரையும் கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று ( 5) பூரணமாக விடுதலை செய்து உத்தரவிட்டது.

நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12,000 இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தமை ஊடாக, நீண்டகால இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்தே அம்மூவரையும் இவ்வாறு விடுவித்து கோட்டை நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குறித்த மூவருக்கும் எதிராக, அந்த விவகாரத்தில் வழக்கை முன்கொண்டு செல்ல முடியாது என சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை கோட்டை நீதிமன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்த நிலையிலேயே நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.