சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் அங்குள்ள பெஷ்மெர்கா பிரிவு மக்களுக்கு ஆதரவாகவும் ரஷியா நடத்திவரும் ஆவேச தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது விரைவில் உச்சகட்ட தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
சமீபத்தில் 224 பேருடன் எகிப்து நாட்டு பாலைவனம் வழியாக சென்ற ரஷிய விமானத்தை வெடிகுண்டினால் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்ததாக நம்பப்படுகின்றது. மேலும், தென்மேற்கு ரஷியாவில் உள்ள கன்ட்டிஷேவோ கிராமத்தை வெடிகுண்டுகளால் தகர்க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முன்கூட்டியே உளவறிந்த ரஷிய ராணுவத்தினர் கடந்த வாரம் அந்த திட்டத்தை முறியடித்தனர்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். முஹம்மது நபியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்த சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் காட்சிகளுடன் ‘விரைவில்.., விரைவில் பெருங்கடலாக உங்கள் நாட்டில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடும். காஃபிர்கள் (இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்) குரல்வளை எங்கள் கத்திகளால் அறுக்கப்படும். கிரெம்ளின் மாளிகை எங்கள் வசமாகும்’ என ரஷிய மொழியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.