இஸ்லாமிய நாடுகளை வளைக்க, இந்தியாவிலிருந்து காய் நகர்த்துகிறாரா மொரகொட..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் சலேஹ் ஈத் அல் ஹுசைனியிடம் நேற்று (16) புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பின் பிரதியை வழங்கினார்.

புதுடெல்லியில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுடன் உரையாடலை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, நேற்று காலை உயர்ஸ்தானிகர் மொரகொட, புதுடெல்லியில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் தூதுவர் அல் ஹுசைனியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் சவுதி தூதுவர் ஆகியோர் இந்தியாவின் ஈடுபாட்டுடன் முத்தரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்கான சாத்தியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதன்போது, இலங்கையின் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU)வினால் வெளியிடப்பட்ட புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு சவூதி தூதுவருக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, உயர் ஸ்தானிகர் மொரகொட சிங்கள குர்ஆனின் பிரதிகளை டெல்லி ஜமா மஸ்ஜித், ஜமியத் உலமா-இ-ஹிந்த் (இந்திய முஸ்லிம் இறையியலாளர்கள் சபை மற்றும் மொராக்கோ மற்றும் பஹ்ரைன் தூதுவர்கள் மற்றும் நைஜீரியாவின் உயர் ஸ்தானிகர் ஆகியோரிடம் புது டெல்லியில் வழங்கினார்.

‘இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயம்’ என்ற கொள்கை திட்டத்திற்கு இணங்க, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மதங்களுடனும் உரையாடலை ஊக்குவித்து வருகிறது.