பட்டதாரி ஆசிரியர்கள் 5,500 பேர் ஆசிரியர் சேவைக்கு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
வயது 35 இனை பூர்த்தி செய்யாத 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல் மற்றும் வர்த்தகம் போன்ற பாடங்களுடன் தொடர்புடைய மூன்று மொழி ஊடகங்களிலிருந்தும் குழு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது.

அத்துடன், 7,500 கல்லூரி ஆசிரியர்களுக்கு இம்மாதம் 16ஆம் திகதி புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

பௌதீக வளங்களையும் மனித வளங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரம் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அதற்கு மாணவர்களின் ஒழுக்கம் இன்றியமையாதது எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூகத்தில் உள்ள போதைப்பொருள் போன்ற தவறான நடத்தைகள் மற்றும் தகாத நடத்தைகள் பாடசாலைகளுக்கு நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் புதிய தலைமுறையினரிடையே ஒழுக்கமற்ற நடத்தைகளை மத நோக்குநிலை மற்றும் புரிதலில் மாற்றுவதன் மூலம் மாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை நிர்வாகத்திற்கு அதிபருக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பழைய மாணவ சங்கங்களின் முறையற்ற தலையீடுகள் பொருத்தமற்றது எனவும், அவ்வாறான விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.