பிரமிட் திட்டத்தில் சிக்கி விடாதீர்கள் – குடும்பத்தை தவிர்க்கவிட்டு ஆசிரியரின் துயரமான தீர்மானம்..!

இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கிய வரஸ்முல்ல பிரதேசத்தில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பாடசாலை விளையாட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில்  இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீநாத் தர்ஷன் (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஆசிரியர்  வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு, கனுமுல்தெனிய கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என வரஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த முதலாம் திகதி முதல் ஆசிரியர்  காணாமல் போயிருந்ததாக கூறப்பட்ட நிலையில் அன்றைய தினம் விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த  நிலையில் ஆசிரியர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்ததாக போலீசார் கூறுகின்றனர்.

 ஆசிரியர் கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை   பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்து பலன் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

 மேலும்  ஆசிரியர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலிட்டது குடும்பத்தினருக்கு  தெரியாது என தெரிவித்த  பொலிஸார், சம்பவம்  தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.