கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய மக்களாணைக்கு அமையவே ரணில் செயற்பட வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்..!

13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்கள் பேரவையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ஆகவே, அவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய மக்களாணைக்கு அமைய செயற்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவதாக சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

தேசிய பொருளாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பாதற்காகவே ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம் என பொதுஜன பெரமுனவினர் குறிப்பிடுகிறார்கள்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறும். நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.