பல்கலைக்கழக மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது உயர்கல்வி அமைச்சு

பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு பல்கலைக்கழக மாணவா்களிடம் உயர்கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடாத்துவதனை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு கோரப்பட்டள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியமானது போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எழுத்து மூலம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உயர்கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

எனினும் பேச்சுவார்த்தை நடாத்த அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும் மாணவர் ஒன்றியம் போராட்ட வழியை தெரிவு செய்துள்ளதாக உயர்கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்னும், இன்று பேச்சுவார்த்தை நடாத்த தயார் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும் போராட்டத்தை கைவிட்டு இரு தரப்பிற்கும் பொருத்தமான ஓர் தினத்தில் பேச்சுவார்த்தையை நடாத்த முடியும் என உயர்கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.