ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 18 முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் இவ்வாறு வழக்குத் தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும் சில முக்கியஸ்தர்களின் புதல்வர்களுக்கும் எதிராக குறித்த வழக்குத் தொடரப்பட உள்ளது.
குறித்த வழக்கானது, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொடரப்பட உள்ளது.
கடந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும், அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமக்கு எதிராக செயற்படுவோரை அரசாங்கம் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கில் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.