
கடிதத்தில் பெயரிடப்பட்டிருப்பவர்கள் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அல்ல – சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பி 92/2009 ஆம் இலக்க வழக்குடன் தொடர்புடையதாக கடந்த ஜனவரி 27 ஆம் திகதி சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் பெயரிடப்பட்டிருக்கும் சந்தேகநபர்கள் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புபட்டிருப்பதாகக் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அல்ல என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தினால் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உடலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கமுடியும் என சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் செய்யப்பட்டிருக்கும் சிபாரிசு தொடர்பில் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கும் நிலையில், இதுகுறித்துத் தெளிவுபடுத்தி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பி 92/2009 ஆம் இலக்க வழக்குடன் தொடர்புடையதாக கடந்த ஜனவரி 27 ஆம் திகதி சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் பெயரிடப்பட்டிருக்கும் சந்தேகநபர்கள் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புபட்டிருப்பதாகக் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அல்ல லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் இன்னமும் முடிவுறவில்லை.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 6 வருடங்கள் கடந்ததன் பின்னர், 2015 ஆம் ஆண்டு அப்படுகொலையை நேரில் கண்ட சாட்சியாளர் அல்லாத அவரது (லசந்தவின்) சாரதி, குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் மீண்டும் வாக்குமூலம் அளித்த வேளையில், 2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அடையாளம் தெரியாத குழுவினரால் தான் கடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதனை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதுகுறித்து கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ள பி 92/2009 ஆம் இலக்க வழக்கின் கீழேயே விடயங்களை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவ்விசாரணைகளின் பிரகாரம் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட பிரேம ஆனந்த உதலாகமவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் இன்மையால், அவரை விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று லசந்த விக்ரமதுங்க பயணித்த வாகனத்தில் இருந்த குறிப்பு புத்தகத்தை மறைத்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கைதுசெய்யப்பட்ட ஹெட்டியாராச்சிகே தொன் திஸ்ஸசிறி சுகதபால மற்றும் விதாரண ஆராச்சிகே சிறிமெவன் பிரசன்ன நாணயக்கார ஆகிய இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததனால் அவர்களையும் விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விடுதலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்துப் பரிசீலனை செய்வதற்கு எவ்வகையிலும் இடையூறாக அமையாது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.