வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விமானம்; பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மக்கள் பல்வேறு துயரங்களை எதிர் கொண்டுள்ளனர்.

இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்துக்கள் உட்பட விமான சேவைகளும் முடங்கியுள்ளன.

அத்துடன் தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் மீனம்பாக்கத்தில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்ப்ஸ்ட்ரீம் விமானம், பல அடி தூரம் வெள்ளநீரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கல்ப்ஸ்டீம் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட் விமானம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு குப்பை போன்று ஓரிடத்தில் ஒதுங்கியுள்ளது.

இதுதவிர சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

மீட்பு பணியில் சுமார் 500 படகுகள் அரசு சார்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 12 ஆயிரம் பொலிசார் களத்தில் உள்ளனர்.

சென்னையில் மழையால் நேற்று மட்டும் 5 பேர் உயிர்ழந்துள்ளார்கள். இதனால் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நிவாரண முகாம்களில் 1.64 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை பார்வையிட்டார்.

அத்துடன் தொடர் மழை, வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 6ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தேங்கி நிற்கும் வெள்ள நீர் வடியாததாலும், மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதாலும் சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.