தவணை முறையாய் தண்டிக்கும் யசாராவும் தவியாய் தவிக்கும் ராஜபக்ஷரும்

யோசித்த ராஜபக்ஷவின் முன்னாள் காதலி யசாரா அபேநாயக்கவின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ஷ குடும்பம் கலங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது.

ராஜபக்ஷ குடும்பத்தின் இரண்டாவது புதல்வரான யோசித்தவின் முன்னாள் காதலியான யசாரா அபேநாயக்க , பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுடீன் கொலை விவகாரம் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு ராஜபக்ஷ குடும்பத்தை சிக்கலுக்குள் தள்ளி விட்டிருந்தார்.

கொழும்பு நியூஸ் டுடே நிறுவனத்துடன் இணைந்து இது தொடர்பில் அவர் பாரிய ஊடக பிரச்சார நடவடிக்கையொன்றையும் முன்னெடுத்திருந்தார்.

இதன் காரணமாக தற்போது யோசித்த ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதற்கிடையே யசாரா அண்மையில் தாஜுடீனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், றக்பி வீரருமான கண்டியைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபரான பசில் மர்ஜாவைத்(fasil marja) திருணம் செய்து ராஜபக்ஷ குடும்பத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தார். இது ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது யசாரா தனது அடுத்த அஸ்திரத்தை ஏவியுள்ளார். சீஎஸ்என் தொலைக்காட்சியின் நிதி மோசடிகள் மற்றும் அரச வளங்களை துஸ்பிரயோகம் செய்து தொலைக்காட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் அவர் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்திருந்த யசாரா, அத்துடன் வெறுமனே நின்று விடாது நேற்று நாமல் ராஜபக்ஷவுக்கு குறுந்தகவல் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

சீஎஸ்என் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் நான் வாக்குமூலமாக அளித்துள்ளேன். அதன் பணிப்பாளர்கள் அனைவரும் கம்பி எண்ணத் தயாராக இருங்கள் என்று அந்த குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீஎஸ்என் தொலைக்காட்சியின் உரிமையாளராக யோசித்த கடமையாற்றிய அதே வேளை, யசாரா அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயல்பட்டிருந்தார். நாமல், ரோஹித்த உள்ளிட்டோர் அதன் பணிப்பாளர் சபையில் கடமையாற்றியிருந்தனர்.

இந்நிலையில் யசாராவின் குறுந்தகவல் ராஜபக்ஷ குடும்பத்துக்கு பெரும் பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சியில் நிலைகுலைந்துள்ள அவர்கள் நிலைமையை எதிர்கொள்வது தொடர்பில் தவியாய் தவித்துக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ராஜபக்ஷவினர் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை அதிகப்படுத்தும் வகையில் எதிர்வரும் 15ம் திகதி சீஎஸ்என் தொலைக்காட்சியின் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்கு சமூகமளிக்குமாறு யோசித்த, நாமல் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு இந்த அறிவித்தலை அனுப்பியுள்ளது.