பியர் மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் பியர் மற்றும் மதுபான உற்பத்திகளுக்கு அதிகளவு வரி அறவீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என உற்பத்தியாளர்கள் மேலும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து பியர் மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றில் ஒன்பது மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நேற்று உச்ச நீதிமன்றினால் பரிசீலிக்கப்பட்டது.
வரி தொடர்பில் இதுவரையில் வர்த்தமானி அறிவித்தலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என உற்பத்தியாளர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னும், வர்த்தமானி அறிவித்தல் அச்சிட ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அச்சிடப்படும் எனவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர், கலால் திணைக்கள ஆணையாளர் உள்ளிட்டவர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மதுபான உற்பத்தி அனுமதி பத்திரத்திற்காக வருடாந்தம் 150 மில்லியன் ரூபாவும், மாதாந்தம் 250 மில்லியன் ரூபாவும் அறவீடு செய்ய புதிய வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை ஏற்புடையதல்ல என பியர் மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள் சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்துள்ளனர். நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் வரி அறவீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே புதிய வரிகளை ரத்து சேய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பியர் மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மேலும் கோரியுள்ளனர்.
பிரதம நீதியரசர் கே.சிறிபவன், நீதியரசர்ளான பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரட்ன ஆகியோர் இந்த மனுவை பரிசீலனை செய்தனர்.
மனுக்கள் தொடர்பில் ஜனவரி மாதம் 18ம் திகதி அறிவிக்கப்படும் என நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.