ஹென்ரிக் இசை நிகழ்ச்சி குறித்து முஸம்மில் விளாசல்

லத்தீன் அமெரிக்க பாடகர் எக்ரீக்கை இலங்கைக்கு அழைத்து வந்த நிறுவனம் கறுப்புப் பட்டியலிடப்படும் என கொழும்பு மாநகரசபையின் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்க பொப் இசைப்பாடகர் ஹென்ரிக் இக்லிஸியஸ், இலங்கையில் கலந்துக்கொண்ட இசை நிகழ்ச்சி தொடர்பில் கொழும்பு மாநகர சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த இசை நிகழ்ச்சியில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், 7000 டிக்கட்களுக்கான தொடர் இலக்கங்களை மாத்திரமே ஏற்பாட்டாளர்கள் கொழும்பு மாநகர சபைக்கு வழங்கியிருந்ததாகவும், ஆனால் அதில் உண்மை தன்மை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னிடம் 7000 தை தொடர்ந்து வரும், மேலதிகமாக 750 டிக்கட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர மேயர் ஆதாரபூர்வமாக இன்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

ஒரு வார காலத்திற்குள் இந்த விடயம் குறித்து தமக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு விளக்கமளிக்க தவறும் பட்சத்தில் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமது அனுமதியின்றி இனிவரும் காலங்களில் எந்தவொரு இசை நிகழ்ச்சியும் நடாத்த முடியாது என மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.

வெளிநாட்டு கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்படும் பட்சத்தில், கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அனுமதி அத்தியாவசியம் என அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.