தெமட்டகொடவில் கடத்தப்பட்ட நபரை ஹிருனிகாவிடம் அழைத்துச் சென்றதற்கான சாட்சிகள் கிடைத்துள்ளன – பொலிஸார்

தெமட்டகொடவில் அண்மையில் கடத்தப்பட்ட நபர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவிடம் அழைத்துச் செல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று(31) நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு நிற டிபென்டர் ரக வாகனத்தில் சென்றவர்கள் குறித்த நபரை கடத்தியுள்ளனர்.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேக நபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடத்தல் பற்றி கூறியுள்ளார்.

தமது தயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருனிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் சில ஆலோசனைகளை சட்ட மா அதிபர் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் சம்பவத்துடன் ஹிருனிகாவிற்கு தொடர்பு உண்டு என்பது உறுதியானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடுமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடத்தல் தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் ஹிருனிகாவை கைது செய்யவோ வேறு சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியவில்லை என பொலிஸார் முன்னதாக கூறியிருந்தனர்.

எனினும், தற்போது ஹிருனிகாவிடம் கடத்தப்பட்டவர் அழைத்துச் செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸாரே நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீளவும் ஹிருனிகாவிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.