எம்பிலிபிட்டி பொலிஸாரை கைது செய்யுமாறு பரிந்துரைக்கவில்லை – ருவான்

எம்பிலிபிட்டி பொலிஸ் நிலையத்தின் 21 உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு பரிந்துரை செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமசிங்கவின் அறிக்கையில் 21 பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்படவில்லை.

அண்மையில் எம்பிலிபிட்டியில் பொலிஸாருக்கும் பிரதேசத்தில் விருந்துபசாரமொன்றை நடத்திய கும்பலொன்றுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த மோதல் சம்பவத்தில் 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் கடந்த 17ம் திகதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் 18ம் 19ம் திகதிகளில் பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் 21 பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எம்பிலிபிட்டி சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை பற்றி எதுவும் தெரியாது என 18ம் திகதி பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.