வில்பத்து தேசிய வனாந்தரத்தில் குடியேற்றங்களை அமைத்தமை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு எதிர்ப்பைச் சமர்ப்பிக்க, வழக்கின் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம், மார்ச் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை (21), இந்தக் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கால அவகாசம் வழங்கினார்.
வில்பத்து தேசிய வனாந்தரத்துக்கு உரித்துடைய ஆயிரக்கணக்கான ஏக்கர், சட்டவிரோதமான முறையில் சுத்தப்படுத்தி அதில் மீள் குடியேற்றம் செய்தமை மற்றும் சட்டவிரோதமான நிர்மாணங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரி, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிக்கான மையம் தாக்கல் செய்த இந்த மனுவில், வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறே, ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த இந்த மனுவில், வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மன்னார் மாவட்ட செயலாளர், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சட்டமா அதிபர் உள்ளிட்ட ஒன்பது பேர், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.