சென்னையில், கைத்தொலைப்பேசி வெடித்து கணவன் மனைவி தம்பதியர் உடல் கருகி பலியாகினர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இவர்களுடைய மகன் தீப்புண் காயங்களுடன் உயிருக்குப் போராடிவருகிறார்.
முன்னதாக, நேற்று முன் தினம் சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜேந்திரன் தமது மனைவி ராணி மற்றும் தினேஷ் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
வேலைக்குச் செல்வதற்காக, அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பதற்காக ராஜேந்திரன் தமது கைத்தொலைப்பேசியில் அலாரம் வைத்திருந்தார். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் கைத்தொலைப்பேசியை வைத்து விட்டு படுக்க சென்றுவிட்டார்.
இதனையடுத்து காலை 5 மணிக்கு அலாரம் அடித்தபோது, எதிர்பாராதவிதமாக கைத்தொலைப்பேசி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் மெத்தை தீப்பிடித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில், தீ வீடெங்கும் பரவியது. இதனால், அலறியடித்து எழுந்த, ராஜேந்திரன், அவரது மனைவி ராணி மற்றும் தினேஷ் ஆகிய மூன்று பேரும் எங்கும் ஓட முடியாத நிலையில் தீயில் சிக்கினர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு வீர்ர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காப்பாற்றப்பட்ட மூன்று பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ராஜேந்திரனும், ராணியும் முறையே நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இவர்களுடைய மகன் தினேஷ்,மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.