நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு, சிறைவாசம் அனுபவிக்கும் பிரபல நிழல் உலக தாதா தெமட்டகொட சமிந்த உதவி, ஒத்தாசை புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரர் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று மாலை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற முன்னர், மதிய நேரம் மேற்படி தெமட்டகொட சமிந்தவே அவரது காவியுடையை துவைத்துக் கொடுத்ததாகவும் அறியக் கிடைக்கிறது.
வர்த்தகர் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன இருந்த சிறையறையே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க உட்பட்ட பல சிறைச்சாலை அதிகாரிகள் இன்று அவரைப் பார்ப்பதற்கு அங்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமன்றி, 50க்கும் மேற்பட்ட பிக்குகளும் இன்று அவரைப் பார்ப்பதற்கு சிறைச்சாலைக்குச் சென்றுள்ளபோதும், சிலருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் 200 பிக்குகள் அளவில் ஞானசாரரைப் பார்ப்பதற்கு அங்கே சென்றதாகவும், அவர்களில் 100 பேரளவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எப்படியோ, கைதியொருவரைப் பார்வையிடுவதற்கு ஒருநாளைக்கு 03 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்கிற சிறைச்சாலை விதிமுறையும் இங்கு மீறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.