சுஷ்மாவின் இலங்கை வருகையும், சந்திக்கவுள்ள பிரபலங்களும்

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை வரவுள்ளார். இலங்கை – இந்தியா ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர், இலங்கைக்கு வருகின்றார்.

இலங்கை – இந்தியா ஒன்றிணைந்த ஆணைக்குழு மாநாடு, இன்று 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் அதன் இணைத்தலைவராக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவுள்ளார்.

1992 ஆம் ஆண்டு இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

இந்த விஜயத்தின் போது, சுஷ்மா சுவ்ராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15க்கு சந்திக்கவுள்ளார்.