ஐ.எஸ். தீவிரவாதிகளின் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு உதவி – நியூயோர்க் டைம்ஸ் குற்றம்

தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் நீரூற்றி, உரமிட்டு வளர்த்துள்ளது என்று அமெரிக்க நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தீவிரவாத தலைவர்கள் சுதந்திரமாக உலாவும் வசதியை பாகிஸ்தான் அமைத்துக் கொடுத்துள்ளது.

தாலிபான் இயக்கத்தை தலைமையேற்று நடத்தும் ஹக்கானி கூட்டமைப்பின் தலைவர் சிராஜுதின் ஹக்கானி. இவர் தலிபான் இயக்கத்தின் 2-வது பெரிய தலைவர் ஆவார். இவர் பாகிஸ்தானில் அச்சமின்றி நடமாடுகிறார். அண்மையில் ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைமையகத்துக்கு சென்றுள்ளார்.

இன்னும், தாலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா அக்தர் முகமது மன்சூர் தற்போது பாகிஸ்தானின் குவெட்டா நகரில் வாழ்கிறார். கடந்த ஆண்டு தாலிபான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரை அவர் தீவிரப்படுத்தியுள்ளார்.

அடுத்ததாக அல்-காய்தா தலைவர் அய்மான் அல்-ஜவா ஹிரி. இவர் பாகிஸ்தானின் பலுசிஸ் தான் மாகாணத்தில் சகலவித பாதுகாப்பு வசதிகளுடன் வாழ்கிறார். அவரது தலைமையில் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் அல்-காய்தா தீவிரவாத பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த முகாம்களை அழிக்க அமெரிக்க ராணுவம் கடுமையாகப் போராடி வருகிறது.

சர்வதேச நாடுகளால் தேடப்படும் இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு ஆதரவு அளிக்கிறது.

இதேபோல சிரியா, ஈராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வளர்ச்சிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு பெரிதும் உதவியிருக்கிறது.

அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சன்னி முஸ்லிம்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. அதற்காகவே ஐ.எஸ்., அல்-காய்தா, தலிபான்கள் உள்ளிட்ட சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு அந்நாட்டின் உளவு அமைப்பு தாராளமாக உதவி வருகிறது.

ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளை சர்வதேச சமுதாயம் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது..