தேசியப்பட்டியல் உறுப்புரிமை வேறு கட்சிக்கு அளித்தமை அநீதி – ரோஸி

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கியமை தம்மை மிகவும் கவலையடையச் செய்துள்ளதாக முன்னாள் மகளிர் விவகார

இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை சரத் பொன்சேகாவிற்கு வழங்கியமை என்னை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இதனால் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கட்சிக்காக நான் செய்திருந்த அர்ப்பணிப்புக்களுக்கு உரிய அங்கீகாரம் எனக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

மேலும், கட்சியின் ஆதரவாளர்களுக்காக தொடர்ந்தும் கட்சியில் வகித்து வரும் பதவிகளில் நீடிப்பேன்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டுமென பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் பெண் என்ற காரணத்தினால் எனக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோனது.

இலங்கையின் எந்தவொரு அரசியல் கட்சியும் பெண்களுக்கு நியாயம் இழைப்பதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்புரிமை எனக்கும் ஜோசப் மைக்கல் பெரேராவிற்கும் வழங்காது வேறு கட்சியை சேர்ந்த ஒருவருக்கு வழங்கியமை அநீதியான செயலாகும்.

தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பிலான தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டதல்ல, அமைச்சரவையினால் எடுக்கப்பட்டது என ரோஸி சேனாநாயக்க தனது நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.