தாஜூடீன் கொலை விவகாரம் – சீ.சீ.ரி.வி காட்சிகளை அவசரமாக சோதனையிட முடியாது – பொலிஸார்

றகர் வீரர் வஸீம் தாஜூடீனின் கொலை தொடர்பிலான சீ.சீ.ரி.வி. கமரா காட்சிகளை அவசரமாக சோதனையிட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் அவசரமாக ஆய்வுக்கு உட்படுத்த முடியாது எனவும், சர்வதேச ரீதியில் பிரபல்யமான குற்ற விசாரணை நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச விசாரணை நிறுவனங்கள் இந்தக் காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்த அறவீடு செய்யும் கட்டணம் மற்றும் எடுத்துக் கொள்ளும் காலம் பற்றிய விபரங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த வீடியோ காட்சிகளை மாற்றக் கூடாது என்ற காரணத்தினால் சர்வதேச விசாரணை நிறுவனங்களின் உதவி நாடப்படுகின்றது.

எனவே விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.

சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.