அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டி ஒன்றில் சிவப்பு அட்டை காட்டியதால் நடுவரை கால்பந்து வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் ஒரு வீரர் எதிர் அணி வீரரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி அவரை மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வீரர், தனது காரில் இருந்த பையில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மைதானத்தில் இருந்த நடுவரை சாரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் நடுவரின் தலை, கழுத்து, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. மேலும், வீரர் ஒருவரின் மீதும் குண்டு பாய்ந்துள்ளது
இதனால் ரசிகர்களும், மற்ற வீரர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். துப்பாக்கிச் சூடு நடத்திய வீரர் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த நடுவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மற்றொரு வீரர் காயத்துடன் உயிர்தப்பினார்.
மைதானத்தில் வீரர் ஒருவரால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.