சாதாரண பெண்ணாக இருந்த நான் இவ்வளவு வேகமாக வளர்வதற்கு கதாநாயகர்கள்தான் காரணம் என்று நடிகை சமந்தா கூறினார். விஜய்யுடன் ‘தெறி,’ சூர்யாவுடன் ‘24’ ஆகிய படங்களில் சமந்தா நடிக்கிறார்.
தெலுங்கு படங்களும் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் 100 கிலோ எடையை மூன்று முறை தூக்கி அதனை வீடியோவில் படம் பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமந்தாவின் எடையே 50 கிலோதான். அவரால் எப்படி 100 கிலோ எடையை தூக்க முடிந்தது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வியந்தார்கள். இது குறித்து சமந்தாவிடம் கேட்டபோது ‘‘பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்’’ என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:- ‘நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். வாழ்க்கையில் இந்த அளவுக்கு உயர்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த வளர்ச்சிக்கு நான் காரணம் இல்லை. என்னோடு நடித்த கதாநாயகர்களே காரணம் என்பேன். தமிழ், தெலுங்கு படங்களில் பிரபலமான கதாநாயகர்களோடு நடிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன.
அந்த படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் ரசிகர்களை எளிதாக சென்று அடைந்தேன். என்னை வைத்து படம் எடுத்த டைரக்டர்களும் என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்கிறார்கள்.
தொடர்ந்து எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்து சிறந்த நடிகை என்ற பெயரை தக்க வைக்க போராடுகிறேன். எனது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. வேறு எதைப்பற்றியும் சிந்திப்பது இல்லை.’’
இவ்வாறு சமந்தா கூறினார்