இவ்வருட நடுப்பகுதிக்குள் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான எட்கா ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்,
எட்கா ஒப்பந்தம் தொடர்பாக பலரும் பொய்யான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றனர். குறைந்த பட்சம் ஒப்பந்தம் தொடர்பான இறுதி வரைபு கூட இன்னும் தயாராகவில்லை.
ஒப்பந்த வரைபு தயாரானவுடன் அது தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்து அக்குழு மூலமாக ஒப்பந்தத்தின் சரத்துகள் தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
ஆனாலும் இந்தக் குறித்த ஒப்பந்தம் இலங்கைக்கு மிகச்சிறந்த முறையில் பயனளிப்பதாகவே அமையும். எமது இளைஞர்களின் வேலைவாய்ப்பில்லா பிரச்சினைக்கு குறித்த ஒப்பந்தம் சிறந்த தீர்வாக அமையும்.
மேலும், எட்கா ஒப்பந்தம் தொடர்பான கலந்தாலோசனைக்கு இந்தியப் பிரதிநிதிகள் மார்ச் மாதம் 04ம் திகதி இலங்கை வரவுள்ளனர். அதன் பின்னர் உருவாக்கப்படும் வரைபை நாடாளுமன்றத்தில் முன்வைத்து அனைவரினதும் கருத்துக்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
எட்கா ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் நாடாளுமன்றத்தினுள் விவாதிக்க தயாராகவே இருக்கின்றோம்.
அதற்குப் பதிலாக வீதியோரங்களில் நின்று கூப்பாடு போடுவதனால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்தார்.