இலங்கையில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தனது அமைச்சரவையில் இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.
மேலும், சிங்கள பிபிசி செய்திச் சேவைக்கு கூறியதாவது; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷ, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் அதே கட்சியின் சார்பாகப் போட்டியிட முயற்ச்சிக்கின்றார்.
எனினும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகிக்கும் நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு ஜனாதிபதி இணங்காவிட்டால் அவர் கட்டாயமாக வேறு வழியை முன்னெடுப்பார் என்றும் அவரது பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகவே போட்டியிடுவார் எனவும், மஹிந்த ராஜபக்ஷவால் கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது முடங்கிப் போயுள்ளது என்றும் அவரது பேச்சாளர் குற்றம் சாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தைக் கலைப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.