‘சவுகார்பேட்டை’ – யால் உறங்கவில்லை – ஸ்ரீகாந்த்

வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்துள்ள பேய் படம் ‘சவுகார்பேட்டை’. இதில் பேய், மந்திரவாதி என்று இரட்டை வேடங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார்.

இந்த படம் பற்றி நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,

”இந்த படத்தில் பேய், மந்திரவாதி என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். இந்த இரண்டு பேரும் மோதுவது போன்ற காட்சி படமான போது மிகவும் சிரமப்பட்டேன்.

பேய் வேடம் போட்டுக் கொண்டு மந்திரவாதியுடனும், மந்திரவாதி வேடத்தில் பேயுடனும் மோதும் காட்சி படமானபோது ஒரு வேடத்தில் நின்று கொண்டு மற்றொரு வேடத்துடன் மோதுவது போன்று கற்பனை செய்து கொண்டு சண்டை காட்சியில் நடித்தேன். இது புதிய அனுபவம்.

எனக்கு ஜோடியாக நடித்துள்ள ராய் லட்சுமியும் பேயாக வருகிறார். அவரை வித்தியாசமாக காட்டி இருக்கிறார்கள். ஒரு கவர்ச்சி பாடல் வேண்டும் என்று டைரக்டரிடம் ராய் லட்சுமி அடம் பிடித்தார்.

உண்மையான சுடுகாடுகளில் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. சில மணி நேரத்துக்கு ஒருமுறை பிணம் வந்து கொண்டிருக்கும். மற்றொரு பிணம் எரிந்து கொண்டிருக்கும். சரியாக சாப்பிட முடியாது. உறங்க முடியாது. எலும்புகளும் கிடக்கும். சுமனும், வடிவுக்கரசியும் பதறிவிட்டார்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.