டி20 உலகக்கிண்ணத் தொடர் குறித்து மாலிங்க கருத்து

இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்பது தொடர்பாக இலங்கை டி20 அணியின் தலைவர் மாலிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை டி20 அணியின் தலைவர் மாலிங்க காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். ஆனால் ஆசியக்கிண்ண தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் அதன் பின்னர் நடந்த இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அந்த 2 போட்டிகளிலுமே தோற்று இலங்கை தொடரை விட்டு வெளியேறியது.

இந்நிலையில் மாலிங்க டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இருந்தும் விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வினவியபோது;

இதற்கு பதிலளித்த மாலிங்க, “உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் முதல் போட்டி 17ம் திகதி தான் வருகிறது. அதற்கிடையில் 3 வாரங்கள் இருப்பதால் நன்றாக ஓய்வு எடுக்க முடியும்.

தற்போது சிகிச்சை எடுத்து வருகிறேன். முதல் போட்டிக்குள் நான் முழுவதும் குணமடைந்து விடுவேன் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “சில பேருக்கு நான் பயிற்சிப் போட்டியில் விளையாடாமல் இருப்பது பிரச்சினையாக தோன்றும்.

ஆனால் நிர்வாகம் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளது. இதனால் முதல் போட்டியில் களமிறங்கும் வகையில் முழுவதும் தயாராவேன் என்றும் கூறினார்.