AIDS நோய் என புறக்கணிக்கப்பட்ட மாணவனுக்கு விரும்பிய பாடசாலைக்குச் செல்ல அனுமதி – பிரதமர்

குளியாப்பிட்டியில் எச்.ஐ.வீ  நோய்த் தொற்று பீதி காரணமாக பாடசாலை அனுமதி மறுக்கப்பட்ட மாணவனுக்கு நாட்டின் எந்தவொரு பாடசாலையிலும் அனுமதி பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இன்னும் எவ்வித நிபந்தனையுமின்றி நாட்டின் எந்தவொரு பாடசாலைக்கும் செல்ல அனுமதியளிக்குமாறும் பிரதமர் அறிவித்துள்ளார்.

மேலும், மாணவனின் தாய் விண்ணப்பம் செய்யும் எந்தவொரு பாடசாலையிலும் அந்த மாணவனுக்கு அனுமதியளிக்கப்படல் வேண்டும்.

அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சர் எடுக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவனின் தந்தை எயிட்ஸ் நோயினால் உயிரிழந்தார் என்ற அச்சம் காரணமாகவே குறித்த மாணவனை பாடசாலையில் அனுமதிக்க வேண்டாம் என பாடசாலையொன்றில் பெற்றோர் போராட்டம் நடத்தியதனால், மாணவனுக்கு குறித்த  அந்தப் பாடசாலையில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், மாணவருக்கு எச்.ஐ.வீ தொற்று கிடையாது என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.