தெஹிவளை ரயில் நிலைய குண்டு வெடிப்புச் சம்பவம்: குற்றவாளிகளுக்கு கடூழியச் சிறை

தெஹிவளை ரயில் நிலையத்தில் 1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் நடத்திய குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு இரண்டு ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொள்வதாக சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிக்கு ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த குற்றவாளிகள் இருவரும் சுமார் 20 வருடங்கள் விளக்கமறியலில் இருந்து வருவதால், அதனை கவனத்தில் கொண்டு தண்டனை தளர்த்தி இரண்டு ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர், குற்றவாளிகளுக்கு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் ஓராண்டு புனர்வாழ்வு பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.