போதிய மின் இல்லாத காரணத்தினால் இன்றும் நாளையும் மின்வெட்டு இடம்பெறும் – மின்சார சபை

நுரைச்சோலை மின்நிலையத்திலிருந்து தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததனால் இன்றும், நாளையும் மின்வெட்டுக்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்றும் நாட்டின் பல பிரதேசங்களில் நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் தடைப்பட்ட மின்விநியோகம் மாலை 6.00 மணிக்கே வழமைக்கு வந்தது.

இதனால், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ரயில் போக்குவரத்துக்கான சமிக்ஞை விளக்குகள் சில பகுதிகளில் செயற்படாத காரணத்தினால் ரயில் சேவைகளிலும் பாதிக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக ரயில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.