வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகஷ்ட மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் சிறுவயதுத் திருமணங்கள் இடம்பெற்று குறைமாத சிசுப் பிரசவங்களும் இடம்பெற்று வருவதாகவும் இவற்றுக்கு பெற்றோரும் ஒரு காரணமாகவுள்ளதாக வெல்லவாய பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.எம்.விமலசூரிய தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்பிரதேசத்தின் சேனைகள் மற்றும் வயல்வெளிகளில் அதிக குடும்பங்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்து வருவதால் சிறு வயது முதல் கூலித்தொழிலுக்காக கொழும்பு மற்றும் இதர நகரப் புறங்களிலுள்ள விடுதிகளிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் பணிபுரிந்து வருவதால் பலர் இளம் வயதிலேயே திருமணம் முடித்து இப்பிரதேசத்திற்கு வருகின்றனர். இவர்களது கர்ப்பகாலத்தில் ஆரம்ப சிகிச்சைகள் இடம் பெறுவதில்லை. இதனால் பலர் குறைமாத பிரசவங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை பெற்றோர் அறிந்திருப்பது மிகவும் அவசியம். எனவே, இள வயதுத் திருமணங்கள் இப்பிரதேசத்தில் முற்றாக ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். தங்களது பிள்ளைகள் எங்கு தொழில் புரிந்தாலும் அவர்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும். அப்படி இப் பிரதேசத்திற்கு வெளியே திருமணம் முடித்தாலும் ஆரம்ப கர்ப்பகால அட்டையொன்றினை இப்பிரதேச அரச தாதியின் ஊடாக அவை முறையாகப் பதியப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.