அமைச்சர்களை அதிகரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மே 3 விசாரணைக்கு

ஹந்தபான்கொட சட்டத்தரணியான அருண லக்சிறி தாக்கல் செய்த மனு மே மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை முப்பதுக்கும் மேலாக அதிகரிப்பதால் தனது அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகவும், அந்த எண்ணிக்கையை மீறுவதற்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கவேண்டும் என கோரியே இவர் மனு தாக்கல் செய்தார்.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், உயர்நீதிமன்ற நீதியரசர்களான அனில் குணரத்ன, புவனெக்க அளுவிகாரே ஆகியோர் முன் நேற்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சட்டமா அதிபரும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள் எனவும், கடந்த வருடம் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற அரசு, அரசமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையான முப்பது பேருக்கும் அதிகமாக அமைச்சர்களை நியமித்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.