
லசந்த, ரவிராஜ் படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தபாய ?
லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டுள்ளதாகவும். அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரே செயற்பட்டனர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் நீங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது கொழும்பை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டு விட்டன. குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு இது, இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. அதனால் தான் இவ்வாறு நேர்ந்துள்ளது.
இப்போது இவற்றில் ஓரிரண்டு சம்பவங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. ரவிராஜ் படுகொலையில் இராணுவம் சம்பந்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவருகின்றன.
இதில் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு, அவர்களது வாகனம் போன்றவையும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மறைக்கப்பட மற்றொரு காரணமும் உள்ளது. அவரது சகோதரர் லால் விக்ரமதுங்க மஹிந்த ராஜபக்ஷவின் அடிவருடியாக செயற்பட்டதே இதற்குக் காரணம்.
சிலர் மஹிந்த ராஜபக்ஷவின் அடிவருடிகளாக இருந்து கொண்டு எனக்கெதிராக சாட்சி சொன்னார்கள், இத்தகைய சூழலில் உண்மைகள் வெளிப்படுவது குறைவே என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
