நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உப மின் நிலைய மின்மாற்றிகளின் (ட்ரான்ஸ்போமர்களின்) பராமரிப்பு சேவைகளை ஜேர்மன் நிறுவனத்திடம் இருந்து பெற, மின்சார சபை தயாராகவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
குறித்த பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டரைக் கோடி ரூபாய் வரை சம்பந்தப்பட்ட ஜேர்மன் நிறுவனம் கோரியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்நாட்டின் பொறியியலாளர்களின் அறிவுரைக்கு அமைய சாதாரண தொழிலாளர்களை பயன்படுத்தியே ஒரு இலட்சம் ரூபாய் வரையான குறைந்த செலவில் குறித்த பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க முடியும் என, மின்சார சபையின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இது தொடர்பில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சூலக்ஸன ஜெயவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில், அவ்வாறானதொரு தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை எனக் கூறியிருந்தார்.