ஹிட்லர் பிறந்த வீட்டை கைப்பற்ற அரசு திட்டம்

அடொல்ப் ஹிட்லர் பிறந்த இல்லத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அரசு கூறியுள்ளது.

நாஜி ஆதரவாளர்கள் கூடுமிடமாக அந்த இல்லம் அமைந்துவிடாமல் தடுக்கவே இந்த முன்னெடுப்பு என ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது.

நியோ-நாஜிகளை எப்படித் தடுப்பது என்பது குறித்து பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என ஆஸ்திரிய உள்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நாஜி ஜெர்மனியின் தலைவராக இருந்த ஹிட்லர் கடந்த 1889ஆம் ஆண்டு பிரனவு அம் இன் நகரிலுள்ள அந்த வீட்டில் பிறந்தார்.

அந்த வீட்டை 1972ஆம் ஆண்டுமுதல் குத்தகைக்கு எடுத்துள்ள ஆஸ்திரிய உள்துறை அமைச்சகம் அதை சிறப்புத் தேவைகளைக் கொண்டவர்களுக்கான பகல்நேர மையமாக பயன்படுத்தி வருகிறது.