கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்ப்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி தங்களின் விடுதிக்கு சமூகமளிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை வளாகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஒழுக்காற்று குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் வளாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய விசாரணை அறிக்கை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 15 மாணவர்களுக்கு குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் கூறியுள்ளார்.

குறித்த மாணவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமான பதிலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வளாகத்தில் முகாமைத்துவ பிரிவு மாணவர்களுக்கும், சித்த மருத்துவ துறை மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து கடந்த மார்ச் 14 ஆம் திகதி தொடக்கம் மீள் அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.