மூதூர் தளவைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மூதூரிலுள்ள 15 பள்ளிவாசல்களிலிருந்தும் மக்கள் அணி திரண்டு மூதூர் கலாசார மண்டபத்திற்கு முன்னால் கூடி ஆற்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
திங்கள் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், நேற்றிலிருந்து ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையிலேயே,இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் கூறுகையில்;
1972இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை 2006இல் தள வைத்தியசாலையாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்று வரை எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை, மேலும் சுமார் 26 வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில் 9 வைத்தியர்களே கடமை புரிகின்றனர்.
இன்னும் ஊழியர்,தாதிமார் பற்றாக் குறை இடவசதி போன்றவை குறித்து சுகாதார சேவைப் பணிப்பாளரிடமும், அது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடமும் கூறியும் எவ்விதப் பலனும் எட்டவில்லை.
இதற்கான தீர்வொன்றை விரைவில் பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்டவர்களை அனைத்து மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.



