பொன்சேகா’வின் நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை நாளை மறுதினம்.

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்தமையை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளை மறுதினம் முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்னவால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி இன்று இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, இந்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனுவை எதிர்வரும் 27ம் திகதி விசாரிக்கவுள்ளதாக, உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி அன்றையதினமே இரு மனுக்களையும் விசாரிப்பது சிறந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் சரத் பொன்சேகாவை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்தது அரசியலமைப்பை மீறும் செயல் எனவும், இதனை இரத்துச் செய்யுமாறும் கோரியும் அஜித் பிரசன்ன இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.