யாழில் அதிசய முட்டை ஒன்று கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் – ஏழாலை ஏழு கோயிலடிப் பகுதியில் கோழியொன்று 104 கிராமில் அதிசய முட்டை இட்டுள்ளது. சாதாரணமாக கோழி முட்டை இடும் போது அதன் நிறை 57 கிராம் நிறையில் தான் காணப்படும் என உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.சி. விமலகுமார் தெரிவித்ததுடன் குறித்த முட்டையின் கிராம் அளவு அதிகரித்தமைக்கு கோழித் தீவனமான மாஸ் இற்குப் பதிலாக ‘அசோலா’ என்கிற நீர்த் தாவரம் பயன்படுத்தப்பட்டமை காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

ஏழாலை ஏழு கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த சண்முகலிங்கம் ஹம்சா என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அச்சுவேலி அரச கால்நடைப் பண்ணையிலிருந்து தருவிக்கப்பட்டு உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்ட ஒருநாள் கோழிக் குஞ்சுகள் சிலவற்றை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நீர்த் தொட்டியொன்றில் உரிய விதிமுறைகளுக்கு அமைவாக வளர்க்கப்பட்டு வரும் ‘அசோலா’ என்கிற நீர்த் தாவரத்திலிருந்து சிறு பகுதியை எடுத்துச் சென்று வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

இதனையே கோழித் தீவனமாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவ்வாறு வளர்க்கப்பட்டு வந்த கோழியொன்று கடந்த- 24 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பகல் வேளையில் வழமைக்கு மாறாகப் பெரிய அளவிலான முட்டையொன்றை இட்டுள்ளது.

வழமையாக நாம் வளர்க்கும் கோழிகள் சாதாரண அளவிலேயே முட்டைகள் இடும். கடந்த ஞாயிற்றுக் கிழமை முட்டை இட்டு விட்டுக் கோழி சத்தமிட்ட போது சென்று பார்த்த போது முட்டை வழமைக்கு மாறாகப் பெரிதாகக் காணப்பட்டது.

குறித்த முட்டையை உடன் நிறுத்துப் பார்த்த போது 104 கிராமாகக் காணப்பட்டது. இந்த முட்டையைத் தற்போது பாதுகாப்பாக வைத்துள்ளோம். பலரும் அதனை ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர் எனக் கோழியின் உரிமையாளரான மேற்படி பெண்மணி தெரிவித்தார்.