ஒரு மாதத்திற்கு முன் மரணமாகிய பணிப்பெண் 4ஆம் திகதி சடலமாக நாடு திரும்பியது

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக  பணிக்கு சென்று நிகழ்ந்த தமது மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக ராகம பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, ராகம கல்வலவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான மகளே சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி தனியார் தொழில் முகவர் நிறுவனமொன்றின் ஊடாக வீட்டுப் பணிப்பெண்ணாக அவர்   வெளிநாடு சென்றுள்ளார்.

தொழில் புரியும் இடத்தில் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து தொலைபேசி மூலம் தனது மகள் அடிக்கடி கூறிவந்ததாக மேலும்  தாயார் தெரிவித்துள்ளார்.

ஆயினும், குறிப்பிட்ட பணிப்பெண் சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றிலேயே உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக விபத்தில் மரணமான அப்பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் (04) நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பில் தாயார் கூறுகையில் இவ்விபத்தில் மர்மமொன்று நடந்துள்ளது என நாம் சந்தேகிப்பதாகவும்  குறிப்பிட்டிருந்தார்.