ரயில்களில் பயணச்சீட்டுகள் (டிக்கெட்) இன்றிப் பயணித்தோரிடமிருந்து இதுவரை அறவிடப்பட்டு வந்த 1,500 ரூபாய் தண்டப்பணத்தை 3,000 ரூபாயாக அதிகரிக்கப்பதற்கான அமைச்சரவையின் அனுமதியை ஒரு மாதத்துக்குப் பின்னரே அமுல்படுத்தப்போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இது தொடர்பான எழுத்து மூல அறிவித்தல் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லையென அவ்வமைச்சின் செயலாளர் நிஷால் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரயில்களில் பயணச்சீட்டுகள் (டிக்கெட்) இன்றிப் பயணித்தால், 5 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும் என்றும் அதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என நேற்று வியாழக்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற ஊடகவியலாளர்களுக்கு, அமைச்சரவை முடிவுகள் அடங்கிய அறிக்கைகள், மும்மொழிகளிலும் வழங்கப்பட்டன. தமிழ்மொழியில் வழங்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், டிக்கெட் இன்றி பயணித்தோரிடமிருந்து இதுவரை அறவிடப்பட்டு வந்த 1,500 ரூபாய் தண்டப்பணம், 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்பட்ட அறிக்கைகளில் தண்டப்பணம் 3,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: ஊடக அறிக்கைகளை வழங்கும் அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மும்மொழிகள் தொடர்பில் கவனம் கொண்டிருந்தால், இவ்வாறான தவறுகள் இடம்பெற்றிருக்காது.
(நன்றி – தமிழ் மிரர்)